திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் வாய்க்கால் கரை பகுதியில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பணம் வைத்து சூதாடியவர்கள் திருச்சி-மதுரை ரோடு குஜிலி தெருவில் வசிக்கும் மலர்மன்னன்(56), வெங்கடேசன்(53) அருண்(38), செந்தில்(40), ராஜா கார்த்திக்(37) என்பது தெரியவந்தது.

இதில் ராஜா கார்த்திக் திருச்சியில் போலீஸ்காரராக வேலை பார்த்த போது, கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள், பத்தாயிரம் ரூபாய் பணம், 5 சீட்டு கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.