சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் எஸ்.பி கார்டன் 70 அடி சாலையில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் நடைபாதையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அய்யனார் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் பணம் கேட்டபோது அய்யனார் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்தார். இதனால் கோபமடைந்த வெங்கடேசன் தனது நண்பர்களான சீனிவாசன், வினோத், செந்தில் ஆகிய மூன்று பேருடன் இணைந்து அய்யனாரின் பழக்கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அய்யனார் இல்லாததால் அவரது மனைவி அல்லியிடம் வாக்குவாதம் செய்து கத்தியால் அவரை வெட்ட முயன்றுள்ளனர். இதனையடுத்து அல்லியிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்ததோடு, எடை போடும் எந்திரம் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசன் உட்பட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.