​புனே அருகிலுள்ள பிம்பிள் சவுதாகர் பகுதியில், ‘தி மோமோவாலா’ என்ற கடையில் புகுந்து மிரட்டி, கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகளுக்குப் பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார் தக்க பாடம் புகட்டியுள்ளனர். கடை உரிமையாளரிடம் 4 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதோடு, கையில் ‘கொய்தா’ கத்தியை வைத்துக்கொண்டு கடையிலுள்ள பொருட்களைச் சேதப்படுத்திய அந்த ரவுடிக் கும்பலின் வீடியோ ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

​இந்தச் சம்பவத்திற்குப் பதிலடியாக, கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அவர் அராஜகம் செய்த அதே ‘குணால் ஐகான் ரோடு’ வழியாக நடுரோட்டில் நடத்தி அழைத்துச் சென்றனர். அத்தோடு நில்லாமல், பொதுமக்களிடம் தனது செயலுக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையை வீடியோவாகப் பதிவு செய்து போலீசார் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரவுடிகளுக்குப் பயம் காட்டிய போலீசாரின் இந்த ‘தரமான’ செய்கையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.