கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஆவடியில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 14 பேர் அடங்கிய குழுவாக அந்தமானுக்கு செல்ல 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். அந்த சுற்றுலா நிறுவனம் 14 பேருக்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்து அனுப்பியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அவர்கள் பயணம் செய்ய இயலவில்லை.

இதனால் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற வேண்டும் என சுற்றுலா மற்றும் விமான நிறுவனங்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகள் டிக்கெட்டுக்கான பணத்தை சுற்றுலா நிறுவனத்திடம் கொடுத்து விட்டதாக மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளனர். இதனால் ஞானப்பிரகாசம் சுற்றுலா நிறுவனத்தினரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கொடுத்த காசோலை பணமில்லாமல் திரும்ப வந்தது.

இதனை தொடர்ந்து ஞானப்பிரகாசம் உள்ளிட்ட 14 பேரும் சுற்றுலா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் ஞானப்பிரகாசம் குமரி மாவட்டம் ஒருவர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பயணம் செய்யாத விமான கட்டணம் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய், 35 ஆயிரம் ரூபாய் அபராதம், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் கொடுக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டனர்.