தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(46) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மீனாட்சியின் அண்ணன் கோகுல கிருஷ்ணன்(47) அடிக்கடி தனது தங்கையிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கோகுல கிருஷ்ணனும், அவரது நண்பர்களான தாமோதரன், லோகநாதன் ஆகியோரும் மீனாட்சி வீட்டிற்கு சென்று செலவுக்கு பணம் கேட்டனர்.

அப்போது மீனாட்சி பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த கோகுல கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் இணைந்து தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மீனாட்சி காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோகுலகிருஷ்ணன் உள்பட மூன்று பேரையும் கைது செய்தனர்.