சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் லட்சுமணன் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரும் மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியை பார்ப்பதற்காக லட்சுமணன் மண்ணூர்பேட்டை பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சூரியன்(21), சுதாகர்(20), அருண்(19) ஆகியோர் எங்க ஏரியா பெண்ணை எப்படி காதலிக்கலாம்? என கேட்டு கார்த்திக்கிடம் தகராறு செய்தனர்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த கார்த்திக் நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் காதலியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சூரியன், அருண், சுதாகர் ஆகிய மூன்று பேரும் கட்டையால் கார்த்திக்கை தாக்கி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சூரியன் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.