சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மாநகராட்சி மயான பூமி அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 1 1/2 கிலோ கஞ்சா, 75 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதனால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் சூளைமேடு பாரதியார் தெருவில் வசிக்கும் ராஜு(27), ராஜ்குமார்(27), ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாந்திபிரியா(22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதில் ராஜு மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.