சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி சாலிகிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கர் என்ற நண்பர் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனும், சங்கரும் சந்தித்துள்ளனர். அப்போது வங்கிகளில் தங்க நகை ஏலம் விடுவதை குறைந்த விலையில் எடுத்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என சங்கர் கூறியுள்ளார்.

இதனை நம்பி கார்த்திகேயன் சங்கரிடம் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு சங்கர் தலைமறைவானார். இதுகுறித்து கார்த்திகேயன் வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சைதாப்பேட்டையில் பதுங்கியிருந்த சங்கரை கைது செய்து, 2 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.