சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மகாலட்சுமி(19) சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமி ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அதிக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கு வர்த்தகத்தில் 35 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த பணம் கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 28-ஆம் தேதி உதவி கமிஷனர் வீரக்குமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபியுல்லா தலைமையில் தனிப்படை போலீசார் கொல்கத்தாவிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து பண மோசடி செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அமுலுல்லா கான்(20), முகமது பைசல்(21), முகமது ஆசிப் இக்பால்(33) ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மோசடி செய்த கும்பலை அதிரடியாக பிடித்த தனிப்படை போலீசாரை வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி பாராட்டியுள்ளார்.