கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால்ரோடு சுந்தர விநாயகர் கோவில் வீதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கணேசன் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விளக்கை பற்ற வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டை பூட்டி விட்டு தனது மகளை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வருவதற்காக கணேசன் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்தபோது கரும்புகை வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணேசன் கதவை திறந்து பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களிலும் பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.