கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தலைமை மருத்துவர் கவிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். அதில் மகேஸ்வரிக்கு அழகான 3 ஆண் குழந்தைகள் பிறந்தது. குறை மாதத்தில் பிறந்து எடை குறைவாக இருக்கும் 3 குழந்தைகளையும் மருத்துவ குழுவினர் 40 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பிறகு குழந்தைகளின் உடல்நலம் முன்னேறி எடையும் அதிகரித்தது. நேற்று மருத்துவ குழுவினர் மூன்று குழந்தைகளை பெற்ற மகேஸ்வரிக்கு பரிசு வழங்கி குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளையும், மகேஸ்வரியையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.