கொலை வழக்கிலிருந்து திமுக முன்னால் எம்எல்ஏ ரங்க நாதனை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னையில் உள்ள கொளத்தூர் காமராஜர் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்து 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மர்ம கும்பலால் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டார். நிலத்தகராறு தொடர்பான பிரச்சனையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொளத்தூர் காவல்துறையினர் சையத் இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் தூண்டுதலின்படி தான் தங்களது மகன் கொலை செய்யப்பட்டார் என கூறி, ஆனால் குற்றப்பத்திரிக்கையில்  ரங்கநாதன் பெயரை சேர்க்கவில்லை என்பதால் அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புவனேஸ்வரன் தந்தை சிவா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறி அதனை ரத்து செய்ததுடன் டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சிபிஐ விசாரணை நடத்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய சிபிஐ காவல்துறையினர் திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையத் இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தனிகாச்சலம், பாலச்சந்திரன் உட்பட 12 பேருக்கு எதிராக  சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம் பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், இந்த வழக்கில் இன்றைய தினம் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி கே.ரவி.