கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் அரவிந்த் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அரவிந்த் சாமி தனது நண்பரான சந்தோஷ என்பவருடன் வால்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் இரண்டு பேரும் உருளிக்கல் எஸ்டேட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை-சோலையார் அணை சாலையில் சென்றபோது பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அரவிந்த்சாமி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பேருந்து ஓட்டுனர் மீது தான் தவறு இருக்கிறது என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.