ஈரோடு மாவட்டத்தில் உள்ள சஞ்சய் நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் குனியமுத்தூரில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். கடந்த 8 மாதமாக ஷோரூமில் ராஜேஷ்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பாலாஜி வரவு-செலவு கணக்கையும் பார்த்து கொள்ளுமாறு நிர்வாகத்தை ராஜேஷ் குமாரிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த சில நாட்களாக வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பாலாஜி வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது 17 லட்சத்து 75 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை ராஜேஷ்குமார் தனது வங்கி கணக்கில் செலுத்தி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாலாஜி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் ராஜேஷ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.