கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் எஸ்.என் நகரில் தனசேகர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் விற்பனை நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுவினா(6) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் தனசேகர் தனது மகளுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று விட்டு கடலூர்-விருத்தாச்சலம் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தனசேகரும், மதுவினாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது கணவர் மற்றும் மகளின் உடலை பார்த்து மகேஸ்வரி கதறி அழுதார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.