சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் மில்க் காலனி மூலச்சத்திரம் பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அம்பத்தூர் பச்சையப்பன் மெயின் ரோட்டை சேர்ந்த சத்யநாராயணன் என்பவர் உங்களது மகள்களுக்கு கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித் தருகிறேன் என் ஆசை வார்த்தைகள் கூறி முத்துசாமியிடம் இருந்து 33 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கினார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதுகுறித்து முத்துசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் முத்துசாமியின் மகள்கள் உட்பட 9 பேரிடம் சத்யநாராயணன் 74 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் சத்ய நாராயணனின் மனைவி ஷாலினி மற்றும் உடந்தையாக இருந்த தாமஸ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.