கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டிமாங்கோடு பட்டன்விளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஸ்கூட்டரில் ஸ்ரீமதி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஸ்ரீமதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

இதனால் தங்க சங்கிலி 3 துண்டுகளாக அறுந்து 1 பவுன் தங்கம் மர்ம நபர்களின் கையில் சிக்கியது. உடனடியாக அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஸ்ரீமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மாரியப்பன், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நகையை மீட்டனர்.