சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி ஆற்காடு பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். அந்த பகுதியில் இருக்கும் பூலாவரி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிந்தராஜ் கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக தெரிகிறது. அதே பகுதியில் வசிக்கும் சச்சின், லோகநாதன் ஆகிய இருவரும் கோவிலில் வைத்து சாமி ஆடியுள்ளனர். அப்போது 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த லோகநாதனும், சச்சினும் இணைந்து கோவிந்தராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த கோவிந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கோவிந்தராஜ் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லோகநாதன், சச்சின் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.