கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வரும் தகவல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானவை என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. யூகத்தின் அடிப்படையில் விஷமத்தனமாக பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்..

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது சூட்டிங் நடைபெற்று வரும் கோட் மற்றும் ஒரு படத்திற்கு பிறகு முழுவதுமாக அரசியலில் ஈடுபடவுள்ளார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கணக்குகள் மற்றும் அதிகாரப்பூர் செயலி  வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், 2 கோடி உறுப்பினர்கள்  சேர்க்கையை  கழகத் தோழர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனிடையே சமூக வலைதளங்களில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

புஇந்நிலையில் ஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு, அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கடந்த 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை :

நம் தலைவர் அவர்களின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.

நமது தமிழக வெற்றிக் கழக தலைவர் அவர்களால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர் உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து ,புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழு வீச்சில் நடத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்ட பணி ஆகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ரீதியாகவும், சட்டமன்ற தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின்  நகலை முறைப்படி பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்த கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நமது கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் கட்டுப்பாடுகளை ஏற்று செயல்படுவதை கடமையாக கருத வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நமது இலக்கு குறித்தும் அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் தயாரிக்கும் போதும், பயன்படுத்தும் போதும் கட்சித் தலைமையால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

நமது கழகம் தொடர்பான அதிகாரப்பூர்வ நியமனங்கள், அறிவிப்புகள் அனைத்தும் கழகத் தலைவர் அவர்கள் அல்லது தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் பொதுச்செயலாளர் அவர்களால் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்படும் என்பதை மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு நமது இலக்கான 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.