கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற நபர் தனக்கு 26 வயது இருக்கும் போது சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியது மட்டுமல்லாமல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருடைய மகனின் மொய்க்காப்பாளராகவும் அப்துல் ரஹீம் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அப்துல் ரஹீம் அந்த சிறுவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காரில் சென்று கொண்டிருந்த போது ரெட் சிக்னலை மீறி செல்ல அப்துல் ரஹீமை அந்த சிறுவன் வற்புறுத்தியதாகவும் சிறுவனை சாந்தப்படுத்த முயற்சிக்கும்போது சுவாசத்திற்காக அவரது தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த கருவி துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார். சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அவரை மீட்க கேரளா வரலாற்றில் இல்லாத அளவிற்கு 34 கோடி நிவாரண நிதி திரட்டப்பட்டது.

இந்த நிவாரணத்தை பெற்றுக்கொள்ள சிறுவனின் குடும்பம் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரட்டப்பட்ட நிதி ஒன்றிய வெளியுறவு துறையிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நிதி எதிர் தரப்பினருக்கு வழங்கப்பட்டு இன்னும் ஒரு சில நாட்களில் அப்துல் ரஹீம் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.