சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மகள் உள்ளார். இவருக்கு ஜருகுமலையில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெள்ளையன் தனது உறவினர்களுடன் சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அந்த வேனில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இந்நிலையில் ஜருகுமலை மேலூர், கீழூர் பிரிவு பகுதியில் சென்ற போது நிலைதடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெருமாள், விஜயா, ராகவன் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.