திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவனூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவர்கள் மதிய உணவு நேரத்தில் பள்ளி வளாகம் முன்பு வெளியே வந்தனர். அந்த மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர் சுகுணா உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அருகே நின்ற ஆலமரம் திடீரென சாய்ந்து மாணவர்கள் மீது விழுந்தது.

இதனால் ஜெயந்தி, நிஷா, ப்ரியா சாந்தி, சாய் விமல் உள்பட 12 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவ மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.