தமிழகத்தில் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த பொது தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருகிற புதன்கிழமை கடைசி நாளாகும். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறிய தகுதியான தனித்தேர்வுகளிடமிருந்து தட்கல்  முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்காக மாவட்ட வாரியாக அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000, ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி இணையவழியில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் இணையவளியில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் பற்றிய தனித் தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் போன்றவற்றை இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்கள் போன்றவற்றிலும் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பொது தேர்வுகளுக்கு தனித் தேர்வுகள் தட்கல் முறையில் விண்ணப்பிக்க ஏற்கனவே கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி தற்களில் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.