இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. ‘X’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் சாலையை கவனிப்பதை விட்டுவிட்டு, தங்களது மொபைல் போன்களில் ஏதோ ஒரு வீடியோவை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த ஓட்டுநர் தனது இரண்டு முழங்கைகளையும் ஸ்டீயரிங் மீது வைத்தபடி, கைகளில் மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்குகிறார்; எப்போதாவது ஒருமுறை மட்டுமே சாலையை நிமிர்ந்து பார்க்கிறார். அவருக்கு அருகில் படுத்துக் கொண்டிருக்கும் நடத்துநரும் சாலையையோ அல்லது பயணிகளையோ கவனிக்காமல் தனது மொபைல் போனை பார்ப்பதிலேயே மூழ்கியுள்ளார்.

 

அலம்பாக் பகுதியில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, இந்த அலட்சியத்தின்போது சுமார் 100 கி.மீ வேகத்தில்  பறந்துள்ளது. எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலைக்குள் நுழைந்தவுடனேயே பல தனியார் பேருந்துகளில் இது போன்ற அலட்சியங்கள் வாடிக்கையாக நடப்பதாக அந்தப் பயனர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த துல்லியமான தேதியோ அல்லது பேருந்து நிறுவனத்தின் விவரமோ இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி மக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் “நாங்கள் எக்ஸ்பிரஸ்வே பேருந்துகளில் நிம்மதியாகத் தூங்கும்போது எங்கள் உயிர் இப்படித்தான் ஆபத்தில் இருக்கிறதா? இந்தியாவில் மனித உயிரை விட மலிவானது எதுவுமில்லை” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.