இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், குடியிருப்புப் பகுதி ஒன்றின் தூய்மையான நடைபாதையில் அநாகரிகமான முறையில் சிறுநீர் கழித்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரை, அங்கிருந்த உள்ளூர்வாசி ஒருவர் தைரியமாகத் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  Ghar Ke Kalesh என்ற எக்ஸ் (X) கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், வீடுகள் இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் தூய்மையான பொது நடைபாதையை அசிங்கப்படுத்திய ஆட்டோ ஓட்டுநரை அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் கையும் களவுமாகப் பிடித்து நிறுத்தியுள்ளார்.

தான் பிடிபட்டதை உணர்ந்த ஓட்டுநர், ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தான் அசிங்கம் செய்த இடத்தில் தண்ணீரை ஊற்றி, அதைச் சுத்தம் செய்துவிட்டதாகக் கூறிவிட்டுத் தனது ஆட்டோவிற்குத் திரும்ப முயன்றார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த நபர், பொது இடங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் இதற்கு அபராதம் உண்டு என்று தெரிந்தும் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என அந்த ஓட்டுநரை மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தார்.

 

அப்போது அந்த நபர், “இதையெல்லாம் செய்கிறாயே, இதற்கு அபராதம் இருப்பது உனக்குத் தெரியாதா? சாலையில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? உனக்கு எந்த மொழியில் சொன்னால் புரியும்? உன் வயதைப் பார், ஆனால் உனக்குக் கொஞ்சம்கூடப் பொது அறிவு இல்லை. ஒரு குடியிருப்புப் பகுதியில், வீடுகளுக்கு முன்னால் சிறுநீர் கழித்துவிட்டு, அதன் மேல் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டுச் சுத்தம் செய்துவிட்டதாகக் கூறுகிறாய்” என்று கோபமாகத் திட்டினார்.

வாக்குவாதத்தின் போது ஓட்டுநரின் பெயரைப் பற்றிக் கேட்டதற்கு, அவர் தனது பெயர் “நாகராஜ்” என்று கூறினார். மேலும், அந்த ஓட்டுநரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், பொது நடைபாதைகளைத் தனது வீட்டைப் போல அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டிய அந்த நபர், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். “அவருக்கு அபராதம் விதிப்பதற்காக நாங்கள் போலீஸாரை அழைத்துள்ளோம். அவர்கள் வரும் வரை அவர் இங்கேயே காத்திருக்கும்படி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொது சுகாதாரத்தைக் கெடுக்கும் இந்த அநாகரிகச் செயலைக் கண்டிப்பதோடு, அதைத் தட்டிக்கேட்ட அந்தப் பெங்களூரு குடிமகனுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். எனினும், இந்தச் சம்பவம் நடந்த துல்லியமான தேதி மற்றும் இடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.