திருவாரூர் அருகே உள்ள தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷினி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில், மாணவி தர்ஷினி 500-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அரசுப் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்காகச் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் சேர்ந்து, மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்துப் படிக்க வேண்டும் என்பது தர்ஷினியின் நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. அதன்படி, திருவாரூர் விளமல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் சேருவதற்காக அவர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளார்.
இருப்பினும், 471 என்ற மிக உயர்வான மதிப்பெண்களைப் பெற்றிருந்தும், மாதிரி பள்ளியில் தர்ஷினிக்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தகுதிக்குரிய அதிக மதிப்பெண்களை எடுத்த பிறகும், தனக்கு மாதிரி பள்ளியில் இடம் மறுக்கப்பட்டதால் மாணவியும் அவரது பெற்றோரும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் தர்ஷினியின் உயர் கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது. தனக்கு நேர்ந்த இந்த ஏமாற்றம் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி தர்ஷினி தரப்பில் இருந்து தற்போது நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அவசரப் புகார் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு தனக்கு நியாயமான முறையில் அரசு மாதிரி பள்ளியில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி தர்ஷினி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
