திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக ஆவடி தாசில்தார் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களிடம் 10 மடங்கு மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் எனவும் கூறினர்.

அதன் பிறகு நீதிபதிகள் மனுதாரர்களிடம் 10 மடங்கு மின்கட்டணம் செலுத்த தயாராக இருந்தால் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினர். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், மனுதாரர்களும் தாங்கள் 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாக கூறினர். அதோடு குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா என கூறப்பட்டதால் நீதிபதிகள் அந்த நிலத்தை உரிய முறையில் அளந்து ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தாசில்தாருக்கு உத்தரவிட்டனர்.