திருவையாறு புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் கண்டியூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் புறவழி சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் குறித்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த பத்தாம் தேதி கடிதம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் திருவையாறு கண்டியூரில் ஊரவழி சாலை திட்டத்தை கைவிடக் கோரியும் நிலம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கீழ திருப்பந்துருத்தி, கல்யாணபுரம், 1-ம் சேத்தி கண்டியூர் போன்ற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் நில எடுப்பு ஆர்டிஓ மணிமேகலை, சிறப்பு தாசில்தார் அனிதா போன்றோரிடம் சிவன் கோவிலிலில் இருந்து கருப்பு துணி கட்டிக் கொண்டு ஊர்வலமாக வந்து மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் அளித்த மனுவை அதிகாரிகள் வாங்க மறுத்துள்ளனர். இதனால் விவசாயிகள் வாயில் கருப்பு துணியை கட்டியபடி மனுவுடன் அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ரசீது வேண்டுமென்றால் பதிவு தபால் மூலமாக மனு அனுப்புங்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பதிவு தபால் மூலம் மனுவை அனுப்புவதாக கூறிவிட்டு அங்கிருந்து திரும்பச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.