போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விழுப்புரம் விக்ரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் அவர்களின் உத்தரவின்படி சாலையோர அலுவலகங்களின் செயல்பாட்டினை கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து கழக அலுவலர்களால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது விக்ரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியதை கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் வேல்ஸ் உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்வதற்கு உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட சாலையோர  உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு குறைகள் கண்டறியப்பட்டால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.