பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதாகவும் பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோக்கள் உண்மையில்லை எனவும் அவை போலியாக பரப்பியவை எனவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு உறுதி அளித்துள்ளார். மேலும் ஏழாம் தேதி ஹோலி பண்டிகைக்காக வட மாநிலத்தவர் தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் செல்கின்றனர். தேவையில்லாமல் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.