இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வடமேற்கு இந்தியாவில் சண்டிகர், பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அதேபோல் ராஜஸ்தானில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான அளவில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் நிலவி வந்த நிலையில் மேற்கு நோக்கி வீசக்கூடிய காற்றால் குறைந்தபட்ச வெப்ப நிலை ஆனது இன்று மூன்று டிகிரி செல்சியஸில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நாளை டெல்லியில் லேசான மழை பெய்யக்கூடும். மேற்கு இமயமலை பகுதியில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை அல்லது பனிப்பொழிவு இருக்கக்கூடும். அதேபோல் வடமேற்கு இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வரையிலான கடுமையான காற்று வீசக்கூடும். ராஜஸ்தானில் ஓரிரு  இடங்களில் இன்று தரை பகுதியில் பனி படர்ந்து காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.