சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் மதுரை சென்றனர். தங்களது சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து அவர்கள் ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மாவூர் அணை பிரிவு அருகே சென்ற போது சாலையோரம் நின்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த கார் டிரைவர் மகேந்திரன், காரில் வந்த கார்த்திக், சங்கர், முருகேசன், மற்றொரு கார்த்திக் ஐந்து பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி முருகேசன் மட்டும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.