பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் நவாஸ், இந்திய பவுலர்கள் குறித்து தெரிவித்துள்ள ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “எந்த இந்திய பவுலரை நீங்கள் டார்கெட் செய்து விளையாட விரும்புவீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது எனக்கு கூடுதல் உத்வேகம் கிடைக்கும். உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு எல்லா இந்திய பவுலர்களையும் பிடிக்காது, அவர்களை நான் வெறுக்கிறேன். இன்ஷா அல்லாஹ், வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு எதிராக அதிக ரன்களைக் குவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களை வெளிப்படையாக ‘வெறுப்பதாக’ அவர் கூறியிருப்பது விளையாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர்கள் நடைபெறாத நிலையில், ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. கடந்த 2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட முதலில் மறுப்பு தெரிவித்து பின் ஆடியது போன்ற சர்ச்சைகள் ஓய்வதற்குள், ஹசன் நவாஸின் இந்த ‘வெறுப்பு’ பேச்சு விவகாரத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ரசிகர்கள், “இந்தியாவுக்கு எதிராக ஆடிய ஒரே போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த உங்களது ஆட்டத்தை முதலில் கவனியுங்கள்” என ஹசன் நவாஸை சமூக வலைதளங்களில் கடுமையாக விளாசி வருகின்றனர்.