கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓடியந்தல் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பயன்படுத்தும் பேருந்து நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் பள்ளி பேருந்து தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்துக்கு யாரேனும் தீ வைத்தார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.