கடலூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் வடக்கு தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பித்தளை பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக தெரிவித்தனர். அதற்கு அங்கம்மாள் வேண்டாம் என கூறினார். ஆனாலும் விடாமல் அந்த மர்ம நபர்கள் அங்கம்மாளின் கண் முன்னே அலுமினிய பாத்திரத்திற்கு பாலிஷ் போட்டனர். அதில் ஒருவன் அங்கம்மாளின் காலில் இருந்து மெட்டியை கழற்றி கொடுங்கள் பாலீஷ் போட்டு தருகிறேன் என கூறினார். சிறிது நேரத்தில் ஒரு மர்ம நபர் ஒரு வகையான பொடியை அங்கமாளின் கையில் கொட்டினார். இதனால் அங்கம்மாள் பயந்து போனார்.

அப்போது மற்றொரு நபர் அங்கம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். இதனால் சுதாரித்துக் கொண்டு அங்கம்மாள் திருடன் திருடன் என சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஒருவனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் குமார் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.