கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை சந்தோஷ் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புவனகிரி சென்றார். அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் புவனகிரி ராகவேந்திரா கோவில் அருகே சென்றபோது சந்தோஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சந்தோஷ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சந்தோஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.