திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூரில் ராஜேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அடிக்கடி ராஜேஷ் அன்னூர் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அன்னூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் ராஜேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜேஷ் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமையிடம் நடத்தி விசாரணையில் ராஜேஷ் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.