கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக இந்த அருவியில் நீர்வரத்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நீர் வரத்து இல்லாததால் நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வால்பாறை வனப்பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். மேலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்கும் பொருட்டு நுழைவு வாயிலை மூடி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.