தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் ஐந்தாவது கிழக்கு தெருவில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பேத்தியுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சங்கரலிங்கபுரம் பகுதியில் இருக்கும் மருந்து கடைக்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கூலி தொழிலாளியான இசக்கி முத்து என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் ராதாகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இசக்கி முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.