இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரிடம் காட்டிய அன்பான சைகை, சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் மனங்களை வென்று வருகிறது.
சமீபத்தில் விராட் கோலி விமான நிலையம் ஒன்றிற்கு வந்தபோது, அங்கு பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு உள்ளே நுழையத் தயாரானார். அப்போது, நுழைவு வாயில் அருகே மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து கோலியின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கவனித்தார்.
பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, உள்ளே செல்லவிருந்த கோலி, அந்த ரசிகரைப் பார்த்தவுடன் உடனடியாகத் தனது நடைப்பயணத்தை நிறுத்தினார். பின்னர் அவரிடமே நேரில் வந்து, அந்த ரசிகர் ஆசையுடன் நீட்டிய கிரிக்கெட் மட்டையில் தனது கையெழுத்தைப் (Autograph) போட்டுக் கொடுத்தார்.
Virat Kohli on the way to go inside the airport but he stopped himself after seeing a physically challenged man & signed an autograph, then shook a hand with him.✍️❤️ pic.twitter.com/AW1LHKVB0f
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) January 15, 2026
இந்தியத் தேசியக் கொடியுடன் காத்திருந்த அந்த ரசிகருடன் கோலி அன்பாகக் கைகுலுக்கி, சில நொடிகள் உரையாடிவிட்டுச் சென்றார். பொதுவாகப் பிரபலங்கள் கூட்ட நெரிசலில் விரைவாகச் செல்ல முயலும் வேளையில், கோலி ஒரு ரசிகருக்காகத் திரும்பி வந்து காட்டிய இந்த அன்பு, அங்கிருந்தவர்களையும் இணையவாசிகளையும் நெகிழச் செய்துள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், “நிஜமான சாம்பியன் கோலி தான்!”, “மக்களின் நாயகன்” எனப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். “கோலியின் ஆட்டத்தை விட அவரது இத்தகைய நற்பண்புகளே அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்படும் விராட் கோலி, தனிப்பட்ட வாழ்வில் எளிய மக்களிடமும், ரசிகர்களிடமும் காட்டும் இத்தகைய கனிவான செயல்கள் அவருக்குப் பெரும் மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளன.
