பொது இடங்களில் ரீல்ஸ் (Reels) எடுக்கும் மோகம் அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ ரயிலில் எல்லை மீறிய ஜோடிக்கு முதியவர் ஒருவர் கொடுத்த அதிரடி பதிலடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) எங்கு சென்றாலும் கேமராவும் கையுமாகச் சுற்றி வருகின்றனர். அந்த வகையில், ஓடும் மெட்ரோ ரயிலின் உள்ளே இளம் ஜோடி ஒன்று காதல் ததும்பும் வகையில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது. அந்த வீடியோவின் ஒரு பகுதியாக, இளம்பெண் அந்த இளைஞரை பொது இடத்தில் கட்டிப்பிடித்து ‘ரீல்ஸ்’ செய்துள்ளார்.

தங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த சக பயணிகளுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை உணராமல் அந்த ஜோடி வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தது. இதைக் கண்டு அதிருப்தியடைந்த அருகில் அமர்ந்திருந்த ஒரு முதிய பெண்மணி, சற்றும் தயங்காமல் அந்த ஜோடியைப் பார்த்து, “இந்த நாடகத்தையெல்லாம் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். என்ன நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்?” என முகத்தில் அடித்தாற்போல் கேட்டுள்ளார்.

 

பாட்டியின் இந்த எதிர்பாராத எதிர்வினை, வீடியோவின் போக்கையே மாற்றியது. அந்த ஜோடியின் காதலை விட, பாட்டியின் இந்த துணிச்சலான கண்டிப்பே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ  பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது “பொது இடங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதை மீறுபவர்களுக்கு பாட்டியின் இந்த பதிலடி மிகச் சரியானது. மற்றவர்களின் சங்கடத்தைப் புரியாமல் வீடியோ எடுக்கும் கலாச்சாரம் மாற வேண்டும” எனப் பலரும் அந்தப் பெண்மணியைப் பாராட்டி வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர், “அந்த ஜோடி யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை, அவர்கள் வெறும் வீடியோதான் எடுக்கிறார்கள். அதற்கு இவ்வளவு கடுமையான விமர்சனம் தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக மெட்ரோ, பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் பிற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீடியோ எடுப்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மேலும் பொது இடங்களின் கண்ணியத்தைப் பேண வேண்டும் என்ற பாட்டியின் இந்த ஆதங்கம், பலரின் மனவோட்டத்தைப் பிரதிபலிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.