தேனி மாவட்டத்திலுள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரையும் சேர்த்து வைத்தனர். ஆனால் சண்முகவேல் மது குடித்துவிட்டு தினமும் தன்னது மனைவியுடன் தகராறு செய்தார்.

நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அழகுசின்னு வீட்டில் இருந்து மிளகாய் பொடியை தனது கணவரின் முகத்தில் தூவி அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அழகுசின்னுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அழகுசின்னு கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த எங்களை உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைத்தனர். ஆனால் எனது கணவர் மது குடித்துவிட்டு என்னிடம் தகராறு செய்து வந்தார். அவருடன் வாழ பிடிக்கவில்லை. இதனால் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.