மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரட்டை கொலை சம்பவம அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தை சேர்ந்த நந்தினி – பெருமாள் மகன் சதீஷ்குமார். இவர் கட்டட வேலை செய்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த அழகுமலை என்பவரின் மகள் மகாலட்சுமியை பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயத்தில் மகாலட்சுமிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொருவருடன் திருமணம் நடைபெற்று ஒரு வாரம் வாழ்ந்த நிலையில் அவர் விவாகரத்து வாங்கிக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து சதீஷும், மகாலட்சுமியும் அடிக்கடி போனில் பேசி தங்களது காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இது தொடர்பாக மகாலட்சுமியின் தம்பி பிரவீன் குமார் இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் வேலை முடித்துவிட்டு கொம்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வழியில் பிரவீன் குமார் அவர் கண்ணில் மிளகாய் பொடித்தூவி அரிவாளால் தலையை துண்டாக வெட்டினார். தலையை துண்டாகி அந்த ஊரில் உள்ள நாடக மேடையில் வைத்தது மட்டுமின்றி, ஆத்திரமடங்காத பிரவீன் குமார் தனது வீட்டிற்கு சென்று அக்காவையும்  சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இதனை தடுக்க வந்த மகாலட்சுமி தாயார் கையிலும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகார் அடிப்படையில் கூடக்கோவில் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தனிப்படை அமைத்து பிரவீன் குமாரை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து வந்த நிலையில், பிரவீன் குமாரை இன்று காலையில் கைது செய்து தற்போது கூடக்கோவில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இரட்டை கொலையானது வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கூடக்கோவில் பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீசார் சம்பவ இடத்தில் குவைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதல் தொடர்பாக இரட்டை கொலை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.