தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கொட்டகையில் இருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் முனியப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மர்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளை பார்வையிட்டு விலங்குகளின் கால் தடம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் கிராம மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.