தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் தங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜுக்கு இதயகுமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இதயகுமாரி தனது கணவரிடம் ஸ்கூட்டர் ஓட்ட கற்றுத் தருமாறு கேட்டார். நேற்று முன்தினம் ஸ்கூட்டரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு தங்கராஜ் தனது மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட பயிற்சி அளித்தார். இருவரும் குருவிகுளம்- ராமலிங்கபுரம் சாலையில் நைனாம்பட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் சாலையோர ஓடையில் கவிழ்ந்தது. இதனால் சுமார் 15 அடி ஆழ பள்ளத்திற்குள் விழுந்து தங்கராஜும், இதயகுமாரியும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தங்கராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதயகுமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.