ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, மத்திய அரசு வழங்கியுள்ள இந்த பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது என்ற நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாமல், வெறும் ரூபாய் 6,000 மட்டுமே நிவாரண நிதி என்ற அறிவிப்பு பொதுமக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அன்று, மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், பேரிடர் நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு, உடைகள் இழப்பீடாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 2,500 மற்றும் உடமைகள் இழப்பீடாக ரூ. 2,500 மற்றும் ஒரு வாரத்துக்குக் குறைவான மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைக்கு ரூ. 5,400 வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழக பாஜக, இதன் அடிப்படையில்தான் ரூ. 10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது.

மேலும், மத்திய அரசின் அதே சுற்றறிக்கையில், நெற்பயிர் உள்ளிட்ட பயிர்வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000 எனவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ. 22,500 எனவும், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 8,500 எனவும், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கான இழப்பீடு ரூ. 8,000 ஆகவும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் இழப்பீடு ரூ. 37,500 எனவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ரூ. 4,000 எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்களும், பேரிடர் காலங்களில், இழப்பீடாக இந்தத் தொகையையே மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுக அரசு, தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்தியிருப்பது போல, தவறான தகவல் அளித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் மேலாண்மை நிதியை மட்டுமே பொதுமக்களுக்கு நிவாரணமாக அறிவித்திருக்கிறாரே தவிர, மாநில அரசின் பங்கு என்று எதுவுமே இல்லை. எனவே, அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வழக்கம்போல, திமுக கட்சியினர் தலையீடு இல்லாமல், டோக்கன் வாங்க வேண்டும் என்று பொதுமக்களை திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு அலைக்கழிக்காமல், முறையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்..