தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 800 காலி பணியிடங்களில் 685 பணியிடங்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களைக் கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.பி.சி, பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.