தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கடந்த வருட ஜூன் மாதம் தனியார் முகவர்கள் மூலமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த முத்துக்கருப்பன் உலகன், ராஜ்குமார் கணேசன், கருப்பையா மாயாண்டி, சுந்தரேசன் அம்மாசி, மதுரை வேலூரை சேர்ந்த கருப்பையா முனியாண்டி, கருப்பையா பிச்சன், சேகர் கேசவமூர்த்தி, பாண்டி அழகன் நடராஜன் அழகப்பன், கமுதியை சேர்ந்த செல்வம் வழிவிட்டான், தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணு சின்னையன் போன்றோர் சென்றிருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் அங்கு உறுதி அளித்தபடி வேலை மற்றும் ஊதியம் போதுமான உணவு போன்றவை வழங்காமல்  தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாகவும் அதனால் ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என 13 பேரின் குடும்பத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அயலக தமிழர் நல ஆணையரம் மூலமாக அவர்களை மீட்டு வர உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி 13 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். அதன் பின் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலத்துறை மூலமாக விமான டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டு 13 பேரும் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழக அரசு ஏற்பாடு செய்த வேன் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஓமன் நாட்டில் இருந்த தங்களை மீட்டு அழைத்து வந்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.