தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து நாள்தோறும் 2310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தீபாவளி, பொங்கல் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாகவும் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பொங்கலுக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.