தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் பொங்கல் கருணை கொடையாக 3000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், கோவில் சொத்துகளை பாதுகாக்கவும், கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், இசை கலைஞர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் போன்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

ரூ.1000 -மாக இருந்த அந்த ஓய்வூதியம் தற்போது 3000 ரூபாயாக உயர்த்தியும், கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000 -த்தை  ரூ.4,000 ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டது. தற்போது அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோவில்களில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் அகவிலைப்படி 34% லிருந்து 38% உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவது போல இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பகுதிநேரம், முழு நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.2000 பொங்கல் கருணைக்கொடை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் அதனை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் இந்த ஆண்டு 1.5 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த அறிவிப்புகள் பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிட வழிவகை ஏற்படுத்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.